தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை பல்வேறு நாடுகளில் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலும், இதுவரை 15க்கும் மேற்பட்டார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த ஆதரவற்றவர்களை கணக்கெடுக்கப்பட்டது. அவர்களுக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து அவர்களுக்கு தாம்பரம் நகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.