சென்னை: திருவள்ளூர் அருகே பாஸ்ட் புட் கடையின் உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் புதரில் மறைந்திருந்த வாலிபரை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் போலீசார் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (38). இவர் அப்பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். அதற்கான பணத்தை கேட்ட உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினார்.இதுகுறித்து பாபு திருவள்ளூர் நகர போலீசில் கொடுத்த புகாரின்பேரில் திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தேடி வந்தனர்.இந்நிலையில் மப்பேடு அடுத்த குன்னத்தூர் காட்டு பகுதியில் ஆகாஷ் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் டவுன் போலீசார் அங்கு சென்று ஆகாஷை சுற்றிவளைத்தனர்.
அப்போது திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஓட்டுனர் கலைவாணனை தாக்கிவிட்டு ஆகாஷ் தப்பியோடினார். இதனையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தப்பியோடிய ஆகாஷை துப்பாக்கியால் காலில் சுட்டுள்ளார்.