சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் 27 துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து முடிந்ததையடுத்து, பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் 23 நாட்கள் நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டம், 12 நாளிலேயே முடிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, நிதி ஒதுக்குவதற்காக கடந்த 9ம் தேதி கூடியது. 23 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டதால், சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் (23ம் தேதி) முதல் சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணித்தன. பின்னர் நேற்று முன்தினம் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி 24ம் தேதியுடன் (நேற்று) பேரவை கூட்டத்தை முடித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.