சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 4 பெண்கள் உள்பட 142 பேர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புழல் மத்திய சிறைச்சாலையில் உள்ள மகளிர் சிறையில் 150க்கு மேற்பட்ட பெண்களும், தண்டனை சிறையில் 700க்கு மேற்பட்டோரும், விசாரணை சிறையில் 1900க்கு மேற்பட்டோரும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல், உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதையொட்டி, நேற்று மாலை முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், சிறையில் உள்ள கைதிகளின் அதிக எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்தது.