சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் 31ம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையொட்டி கடந்த 21ம் தேதி காலை 6 மணி முதல் ஆந்திர மாநிலமான திருப்பதி, சித்தூர், கர்னூல், கடப்பா, பெங்களூரு, ரேணிகுண்டா, புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் வாகனங்களை ஊத்துக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், தினேஷ் குமார் மற்றும் போலீசார் 3வது நாளாக நேற்று பால், காய்கறி வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி விட்டனர்.
மேலும், ஆந்திராவில் உள்ள தும்பூர் கோனை நீர்வீழ்ச்சி, வரதயபாளையம் நீர்வீழ்ச்சி மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வாகனங்களான கார், பைக், சுற்றுலா பஸ், வேன் போன்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் திருப்பிவிட்டனர்.