புதுடெல்லி: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 16,510 பேர் உயிரிழந்துளளனர். இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் குறித்து பயம் மக்களிடையே பரவினாலும், கட்டுப்பாடுகளாலும், தனிமைப்படுத்தலாலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து வருகின்றனர். வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 64 பேர் முழுவதும் குணமடைந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். 27 சதவீதம் பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது, இந்த தகவல் மக்கள் மத்தியில் சுற்று நிம்மதியளித்துள்ளது.
கொரோனா தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க, அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஹைட்ராக்சிகுளோரோக்வின் என்ற மருந்தை பயன்படுத்தும்படி, பரிந்துரை செய்துள்ளது. மேலும், பல நாடுகளிலும் இதற்கான மருந்தை தயாரிக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். இதனால், விரைவில் கொரோனா முற்றிலும் தடுக்கப்படும் எனவும், பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.