சென்னை: அரசின் அறிவுறுத்தல் படி பயணிகளின் அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் இயக்கப்படும் என்று ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 416 ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசின் அறிவுறுத்தல் படி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தனது கால் டாக்ஸி சேவை பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளை ஆதரிக்க குறைந்தபட்ச வாகன நெட்வொர்க்கை மட்டுமே நாங்கள் இயக்குவோம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து ஓலா நிறுவனம் டாக்ஸி சேவை ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தது.