கொரோனா படுத்தும்பாடு... பிரம்மாண்ட மண்டபத்தில் 10 பேருடன் நடந்த திருமணம்

திருமலை: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லக்கூடாது. திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட படி தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், துக்குகுடாவில் நேற்று ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என யாரும் பங்கேற்கவில்லை. இதனால் பிரம்மாண்டமாக நடைபெறக்கூடிய திருமணம் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் என 10 பேருடன் மிக எளிமையாக நடைபெற்றது. திருமண மண்டபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் விதமாக நாற்காலிகள் போடப்பட்ட நிலையில் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் அறுசுவை விருந்தும் வீணானது.

Related Stories: