சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கைகளை கழுவுவதும், கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வங்கி ஏ.டி.எம். மையங்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் யாரோ ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் கூட அவர் மூலம் அந்த ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் பரவும். தொடர்ந்து, அத்தியாவசிய தேவை என்பதால் திறந்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான வங்கிகள் அதன் ஏ.டி.எம். மையங்களை கண்டுகொள்ளவில்லை என்பதை காணமுடிகிறது. எச்.டி.எஃப்.சி. போன்ற ஒருசில வங்கி கிளைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வங்கி ஊழியர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து, வாடிக்கையாளர்களை ஒரு அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி பணிகளை மேற்கொள்கின்றனர்.