ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி ஆதம்பாக்கம் 177வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரில் மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் இருந்து வருகிறது. இதனிடையே, இந்த விளையாட்டு திடலில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான தூண்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி தடைபட்டது. இந்நிலையில் கொரோனா நோய்கிருமி தொற்று பரவுவதை தடுக்க மாநகராட்சியில் உள்ள பூங்கா, விளையாட்டு திடல்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விளையாட்டு திடலின் பிரதான கேட்டை மாநகராட்சி ஊழியர்கள் பூட்டுபோட்டு பூட்டிவிட்டனர்.