கடலூர்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வாரச்சந்தைகளை நடத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில் அதையும் மீறி கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி கடலூர் மாவட்டம் வேப்பூரில் வார ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேப்பூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இப்பகுதிக்கு கடலூர் மாவட்டம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். சாதாரண வாரச்சந்தையில் 50 லட்சம் வரை கால்நடைகள் விற்பனை செய்யப்படும். தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் 1 கோடிக்கும் அதிகமாக கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வாரச்சந்தைகள் நடத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.