சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, அவர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். டெல்லியில் இருந்து ரயில் மூலம் வந்த 20 வயது இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம்.