சென்னை: சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஒரே நாளில் 84 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சர்வதேச, உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாததால் ஒரே நாளில் மட்டும் நேற்று 50 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மலேசியாவில் இருந்து 6 விமானங்கள், இலங்கையில் இருந்து 4, குவைத்தில் இருந்து 3, மஸ்கட்டில் இருந்து 3, துபாய், தாய்லாந்தில் இருந்து தலா 2 விமானங்கள் மற்றும் தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மன், லண்டன் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒரு விமானம் என 25 விமானங்களும், சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் 25 விமானங்களும் என மொத்தம் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.