கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: கிறிஸ்தவ ஆலயங்களில் திருவிருந்து ரத்து: சென்னை பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பீதி எதிரொலியாக, கிறிஸ்தவ ஆலயங்களில் திருவிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை சிஎஸ்ஐ பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் உத்தரவிட்டுள்ளார். சென்னை சிஎஸ்ஐ பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் அனைத்து திருச்சபைகளுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:லெந்து கால சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஓய்வுநாள் பாடசாலை மற்றும் அனைத்து ஐக்கிய சங்க கூடுகைகள் ரத்து செய்யப்படுகிறது. பேராயரிடம் இருந்து உத்தரவு வரும் வரை திருவிருந்து மட்டும் ரத்து செய்யப்படுகிறது. ஞாயிறு வழிபாடு முடிந்தவுடன் அவரவர் இல்லங்களுக்கு உடனடியாக செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

லெந்து வெள்ளி, ஞாயிறு வழிபாடு மட்டும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடைபெறும். வருகிற 22ம் தேதி (ஞாயிறு), 29ம் தேதி (ஞாயிறு) ஆகிய நாட்களில் மாலை வழிபாடும் ரத்து செய்யப்படுகிறது.ஆலயங்களில் கூட்டம் கூடுவதின் மூலம் தொற்று பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி மூலம் வழிபாட்டு தலங்கள் தூய்மைப்படுத்தப்படும். அனைத்து திருச்சபை ஆயர்களும் இதனை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: