கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ஓலா, உபர் கால்டாக்சிகளின் கட்டணம் பெருமளவு சரிவு!

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத அளவுக்கு தேவை குறைந்ததால், ஓலா, உபர் போன்ற கால்டாக்சிகளின் கட்டணம் பெருமளவு சரிந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து முடங்கி, சாலைகள் வெறுச்சோடி காணப்படுகின்றன.

மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை பெருமளவு சார்ந்து இயங்கும் கால்டாக்சி நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மெரு கால்டாக்சி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையில் சேவை வழங்கி வருகிறது. ஆனாலும் தங்களின் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன சி.இ.ஓ. நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார். கால்டாக்சி ஓட்டுநர்களும் கடுமையாயக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: