சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். நாள் ஒன்றுக்கு 1500 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கில் ஒரு வழக்கறிஞர் மட்டுமே ஆஜராக வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே மனுதாரர் ஆஜராக வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முதலே வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், தலைமை நீதிபதியை சந்தித்து உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி மற்றும் மூத்த நிர்வாகிகள் அடங்கிய, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.