சென்னை: அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 114 பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம்,
தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா, கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்குக்ள், வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கனவே 2 முறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில்;
* அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு *10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் *அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு *அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவு* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்*கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம்* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் * பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள்* கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை* ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது* தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்* டாஸ்மாக் பார்கள், கோரிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும். * தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்களும் மார்ச் 31 வரை மூடப்படும் * கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். * மத்திய மற்றும் மாநில நல்வாழ்வுத்துறை வழங்கி உள்ள அறிவுரைகளை பொது, தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமலுக்கு வருகிறது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.