சென்னை: புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்(98) கடந்த 7ம் தேதி காலமானார். கலைஞரின் உற்ற நண்பராக இருந்து வந்த அன்பழகன் மறைவு திமுகவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறைந்த அன்பழகன் கடந்த 1977ம் ஆண்டு முதல் திமுக பொது செயலாளராக இருந்து வந்தார். சுமார் 43 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொது ச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.