ஆவடி: ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இச்சாலையை இணைக்கும் வகையில் நேரு பஜார் சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச் சாலை உள்ளது. இந்த சாலைகளை பயன்படுத்தி தான் தாலூகா அலுவலகம், போலீஸ் நிலையம், மார்க்கெட், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், ரயில் நிலையம், நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு சென்று வர வேண்டும். இச்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பூந்தமல்லி சாலை - நேரு பஜார் சாலை சந்திப்பில் மாலை, இரவு வேளைகளில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி சவாரிக்கு பயணிகளை அழைக்கின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாதசாரிகள் நடக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இச்சாலை சந்திப்பில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் சிரமப்பட்டே சென்று வருகின்றன. நேரு பஜாரில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து காய்கறி கடைகள், பழக்கடைகள், துணி கடைகளும் ஏராளமாக உள்ளன. இச்சாலை வழியாக தான் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள், போராட்டங்கள், மறியல் உள்ளிட்டவைகளும் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.