சென்னை: மதிப்பீட்டு சான்று கேட்டு 25 எம்சாண்ட் குவாரிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் 26ம் தேதி தொழில்நுட்ப வல்லுனர் குழு கூடுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், எம்சாண்ட் குவாரிகளில் தயாரிக்கப்படும் மணல் ஒரிஜினல் தானா என்பது பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. அதாவது, விஎஸ்ஐ இயந்திரத்தை பயன்படுத்தாமலும், ஜல்லி தயாரிக்கப்படும் போது இயந்திரத்தில் இருந்து வரும் தேவையற்ற துகள்களையும் எம்சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள 1,200 எம்சாண்ட் குவாரிகளுக்கு தனித்தனியாக பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் அனுப்பபட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள 245 எம்சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.