குரூப் 4 பதவியில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 2ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4 பதவியில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு வருகிற 2ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடங்கும்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 4 பதவியில் (2018-2019, 2019-2020ம் ஆண்டுக்கானது) காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த ஆண்டு  செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த நவம்பர் 12ம் தேதி  வெளியிடப்பட்டது. இத்தேர்வில் உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை  பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வருகிற 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை(5, 6ம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது.  சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பாதரர்களின் தொழில்நுட்ப  கல்வித்தகுதி, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதிகள் மற்றும் காலி பணியிடங்களின்  அடிப்படையில் தற்காலிக பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள்  தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கோரிய கல்விச்சான்று மற்றும் அனைத்து இன்றியமையாத சான்றிதழ்களை நேரில் கொண்டு வர வேண்டும்.  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள்  அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு  அழைப்பாணை தனித்தனியே அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே,  அழைக்கப்படும் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு வழங்கப்படும் உத்தரவாதம் வழங்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு,  கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: