சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னை வருபவர்களை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் சுகாதாரத்துறை மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த 1288 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் 78 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 72 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று 4 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. இதனால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு விமான நிலையத்தில் முறையான சோதனை நடத்தி இருந்தால் பாதிப்பு இருப்பது முன்கூட்டியே தெரியவந்து இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.