கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வாளர்கள் சிலர் நேற்று முன்தினம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பழங்காலத்தில் உலோகங்களை உருக்கிப் பொருட்கள் செய்ய பயன்படுத்திய பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் அமுல்ராஜ் கூறியதாவது:படவேட்டில் உள்ள தாமரை ஏரியின் தென்கரையில் இந்த உலோக உருக்குப் பாறை உள்ளது. இந்த பாறையில் சுமார் அரை அடி ஆழம் கொண்ட, 100க்கும் மேற்பட்ட உரல் போன்ற குழிகள் காணப்படுகின்றன. இவ்வாறான குழிகள் சில நேரங்களில் இயற்கையாகவே பாறைகளில் உருவாக வாய்ப்புண்டு. அத்துடன் விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காகவும் இத்தகைய குழிகளை மனிதர்கள் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இக்குழிகளை நாம் அவ்வாறு கருத முடியவில்லை.
1990ம் ஆண்டு படவேட்டில் அம்மையப்ப ஈஸ்வரம் கோயிலில் தோண்டும்போது அங்கிருந்து நாணயங்கள் செய்வதற்கான உருக்கு உலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.