சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நாளை மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கூற தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஒன்றை நாளை சட்டப்பேரவை வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.