பிகில் பட விவகாரத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை: அமலாக்கத்துறையிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

சென்னை: பிகில் பட விவகாரத்தை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நடிகர் விஜய் சமீபத்தில் பிகில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது. இந்தநிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டியுள்ளது. அந்த கணக்கும் நடிகர் விஜய் வருமான வரித்துறையிடம் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் பிகில் திரைப்படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டிலும் கடந்த 10ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, நடிகர் விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காட்டி விசாரணை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் அளித்த தகவலின் படி நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ெசன்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று மீண்டும் நடத்தினர்.

கடந்த மாதம் 5ம் தேதி நடந்த சோதனையின் போது நடிகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கனிணிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது சீல் வைக்கப்பட்ட  அறையை நேற்று திறந்து  அதில் உள்ள ஆவணங்களின் படியும், தயாரிப்பாளர் லலித்குமார் அளித்த வாக்குமூலத்தின் படியும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 4 மணி நேர விசாரணைக்கு பிறகு சீல் வைக்கப்பட்ட அறையின் சாவியை அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டு சென்றனர். பிகில் பட விவகாரத்தில் இதுவரை கிடைத்த தகவல் மற்றும் சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிகில், மாஸ்டர் படத்துக்கான சம்பளம் தொடர்பான வரியை விஜய் சரியாக கட்டி உள்ளதாக வருவாய் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: