கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடைக்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு வருகிறது. இந்நிலையில், இரை தேடி ஏராளமான பறவைகள் குவிய தொடங்கியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி என ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின. மழையால் 10 ஆண்டுகள் வறண்டு கிடந்த ஏரிகளில் கூட தண்ணீர் தேங்கி நின்றது. கடந்தாண்டு ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பினர் கிருஷ்ணகிரி நகரை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்தனர். இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால், தேவசமுத்திரம் ஏரி, புதூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான பகுதியில் வெயில் அளவு 100 டிகிரியை தொட்டுள்ளதால், ஏரி, குளம், குட்டைகளில் உள்ள தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.