டாஸ்மாக் கடை அருகே வடமாநில வாலிபர் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் அருகே உள்ள காலி மைதானத்தில் நேற்று காலை 7 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் அடித்து சிதைக்கப்பட்டு இருந்தது. தோள்பட்டை எலும்பு உடைந்தும், ரத்தக்கறை உறைந்தும் காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலமாக கிடந்தவர் அணிந்திருந்த சட்டையை போலீசார் சோதனை செய்தனர். சட்டை பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டை மற்றும், ஆதார் கார்டு மூலம், அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ரூட் (30) எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதை தகராறில் கொலை செய்யப்பட்டாரா, இவரது நண்பர்கள் யார், இக்கொலைக்கான பின்னணி என்ன என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: