சென்னை: எளாவூர் சோதனைச்சாவடியில் நேற்று நடந்த வாகன சோதனையில், ஒரு பஸ்சில் 1 கோடியுடன் வந்த ஆந்திர நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியாக கஞ்சா, செம்மரக்கட்டை, அபின் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக நள்ளிரவில் ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் எளாவூர் சோதனைச்சாவடி பகுதிக்கு ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஒரு தனியார் சொகுசு பஸ்சில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் சீட்டுக்கு அடியே 2 டிராவல் பேக்குகளில் 1 கோடி ரொக்கப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பைகளை எடுத்து வந்த ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே சிலுகுலூபேட்டை பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவ ராவ் (52) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.