சிஏஏவை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுநல வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திவரும் தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை நாளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இந்திய அரசமைப்புச் சட்டம்  அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த உரிமை வழங்கியுள்ள போதும், அதை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு அனுமதியும் இல்லாமல் சில மணி நேரங்களில் ஏராளமானோர் கூடி, சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பிப்ரவரி 14ம் தேதி முதல் நடந்து வரும் தொடர் போராட்டத்தை சட்டப்படி தடுக்காவிட்டால் நிலைமை கைமீறிச் சென்று விடும். எனவே, போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும், நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து மார்ச் 11ம் தேதிக்கு (நாளைக்கு) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: