அதிமுக முன்னாள் அமைச்சர் மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் சி.பொன்னையன்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனை மாநில திட்ட கமிஷனின் துணை தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஜெய ரகுநந்தன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது: முதல்வர் தலைமையில் மாநில திட்ட கமிஷன் செயல்பட்டு வருகிறது. முன்னுரிமை அளிக்கப்படும் பிரிவுகளில் அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க இந்த கமிஷனுக்கு துணை தலைவரை நியமிப்பது அவசியமாகிறது. அந்த வகையில், சி.பொன்னையனை மாநில திட்ட கமிஷனின் துணை தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அவரது நியமனம் தொடர்பான உத்தரவுகள் பின்னர் பிறப்பிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிதித்துறை அமைச்சராக சி.பொன்னையன் பணியாற்றினார். அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். தற்போது அதிமுகவின் செய்தி தொடர்பாளராக உள்ளார். எம்பி பதவி வேண்டும் என்று கேட்டு நெருக்குதல் கொடுத்து வந்தார். தற்போது அவர், திட்டக்கமிஷன் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: