தமிழக கோவில்களில் மாற்று திறனாளிகளுக்கு தனி வரிசை கோரி வழக்கு : மிக முக்கியமான பிரச்னையை மனுதாரர் நீதிமன்றத்துக்கு எடுத்து வந்துள்ளதாக நீதிபதிகள் பாராட்டு

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்க கோரிய  மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு

சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக பொதுமக்கள் வரிசை, முக்கிய பிரமுகர்கள் வரிசை, கட்டண வரிசை என தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வரிசை ஏதும் இல்லை.2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

இவர்கள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது சாய்தள பாதை வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், கோவில் வாசலை தாண்டி செல்ல முடியாத நிலை உள்ளது.கண் பார்வை இல்லாத மாற்று திறனாளிகள் கோவில்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு பிரெய்லி முறையில் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை அமைக்க வேண்டும்.எனவே, மாற்றுத் திறனாளிகளுக்காக அனைத்து கோவில்களிலும் சாய்தளம் பாதை அமைக்க வேண்டும். அவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி டிக்கெட் வரிசை தரிசன வரிசை அமைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

இந்து சமய  அறநிலையத்துறைக்கு உத்தரவு

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள்,  மிக முக்கியமான பிரச்னையை மனுதாரர் நீதிமன்றத்துக்கு எடுத்து வந்துள்ளார். எனவே, இதுகுறித்து நான்கு வாரங்களில் இந்து சமய  அறநிலையத்துறை ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல்  வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: