மும்பை : யெஸ் வங்கியில் அரங்கேறிய நிதி முறைகேடு தொடர்பாக மும்பையில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் .பல்வேறு நிறுவனங்களுக்கு பெருந்தொகையை கடனாக வழங்கிய யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயம் பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்து இருந்தது. யெஸ் வங்கி அளித்த கடன்களுக்கு லஞ்சமாக ரூ. 600 கோடி தரப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. டிஎச்எப்எல், ஐஎல்ஆண்ட்எப்எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி கடன் அளித்துள்ளது என்பதும் சிபிஐ தரப்பின் புகார் ஆகும்.
இது தொடர்பாக ஊழல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் ராணா கபூர் மீது சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு நேற்று வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடர்பாக மும்பையில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திசான் ஹவுசிங் நிறுவனம், ராணா குடும்பத்துடன் தொடர்புடைய டாயிட் அர்பன் வென்ச்சர்ஸ் ஆகிய அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.
டிஎச்எப்எல் தலைவர் கபில் வாகவான் அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல துறைகளில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை கடனாக கொடுத்து அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளது குறித்தும் அமலாக்கத்துறை ராணாவிடம் கேள்வி எழுப்பி வருகிறது.