இலங்கை கடற்படை தளபதி உறுதி: இந்திய கடற்படை உதவியுடன் தங்கக்கடத்தலை தடுப்போம்

ராமநாதபுரம்: இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக அதிகரித்து வரும் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை இந்திய கடற்படை உதவியுடன் முழுமையாக விரைவில்  கட்டுப்படுத்துவோம் என இலங்கை  கடற்படை தளபதி பியாஸ் டிசில்வா தெரிவித்துள்ளார்.இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக அதிகளவில் தங்கம், கஞ்சா, பீடி இலைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக  இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு, அதிகாரிகள் ேசாதனையில் சிக்கியுள்ளன. இதுகுறித்து கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொண்ட   இலங்கை கடற்படை வடக்கு  கட்டளை தளபதி பியாஸ் டிசில்வாவிடம் இந்திய ஊடகத்தினர் கேட்டபோது,

‘‘இலங்கை கடற்படை சார்பில் சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகள்  அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை உதவியுடன் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும்  தடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘‘கடத்தல் சம்பவங்களை தடுக்க  இலங்கை கடற்படை, இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அதனடிப்படையில்  எதிர்காலத்தில்  கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவோம். கடத்தல் சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கமாக உள்ளது’’ என்றார்.

Related Stories: