பெரம்பூர்: அயனாவரம் பொன்னுசாமி தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மேன்ஹோல்கள் உடைந்து, திறந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் சீரமைக்க வசதியாக, குறிப்பிட்ட தூர இடைவெளியில் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடைப்பு ஏற்படும் நேரங்களில், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, இந்த மேன்ஹோல்களை திறந்து சீரமைப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். பல இடங்களில் இந்த மேன்ஹோல் மீது கனரக வாகனங்கள் செல்லும் போது, உடைந்து பள்ளம் ஏற்படுகிறது.இவற்றை உடனடியாக சீரமைக்காத அதிகாரிகள், மேன்ஹோல் பள்ளத்தில் மரக்கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்து விடுகின்றனர்.இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.