பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை குவியல் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பீதியில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்னர். சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 37வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் முறையாக துப்புரவு பணி நடைபெறாததால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் பைப்லைன் உடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி, குடியிருப்புகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தேங்கியுள்ளது. இதில், குப்பை கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.குறிப்பாக, 63வது பிளாக் மற்றும் 64வது பிளாக் இடையே உள்ள இடத்தில் கழிவுநீருடன் குப்பை கலந்து சாக்கடையாக காட்சியளிக்கிறது.இவற்றில் கொசு உற்பத்தி அதிகரித்து இங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.