இழிவுபடுத்தும் வகையில் கருத்து: வெள்ளத்துரையிடம் விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மனித உரிமை ஆணையத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து கூறிய காவல்துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளத்துரையிடம் டிஜிபி விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத இதழில் கடந்த பிப்ரவரி மாதம், ‘குற்றவாளிகள் அதிகரிப்பதற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் முக்கிய காரணம்’ என தலைப்பிட்டு திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் கூடுதல் துணை ஆணையராக பணியாற்றும் வெள்ளத்துரை கட்டுரை எழுதியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியான இந்த கட்டுரை குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவரான துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். மேலும் வெள்ளத்துரையின் கருத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, என்ன நடவடிக்கை எடுத்தனர், என்பது தொடர்பான அறிக்கையை விரைந்து மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்ய தமிழக  டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: