சென்னை: குளிர்காலம் முடிந்து கோடை காலம் துவங்குவதால் வெயில் கொளுத்துகிறது. இதனால் உடலில் நீர்சத்து குறைபாடு, எதிர்ப்பு சக்தி குறைகிறது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிவது, பாதுகாப்பற்ற குடிநீர் அருந்துதல் ஆகியவற்றால் ‘வேரிசில்லா’ என்ற வைரஸ் மூலம் சின்னம்மை பரவுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக சின்னம்மையின் தாக்கம் வெளிப்பட தொடங்கி உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கினால் உடலில் சக்தியை இழக்க நேரிடும்.
உடலில் கொப்பளங்கள் தோன்றும். இந்நோயால் பாதித்தவர்கள் தும்முவதால் எளிதில் அடுத்தவருக்கும் பரவும் என்பதால், இவர்களை தனிமைப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘கிராமங்களில் சின்னம்மை பாதிப்பு உள்ளது உண்மைதான். நோயால் பாதித்தவர்களின் உடைகளை துவைத்து, அவற்றை வெயிலில் உலர்த்த வேண்டும். இளநீர், மோர், நுங்கு, பழச்சாறு ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர் அருந்தலாம். அனைத்து கிராம செவிலியர்கள், ஆரம்பர சுகாதார நிலையங்களில் சின்னம்மை வராமல் தடுக்கும் மாத்திரைகள் இருப்பில் உள்ளன. முறையான சிகிச்சையால் கட்டுப்படுத்தலாம், வராமலும் தடுக்கலாம்’ என்றனர்.