சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீசப்பட்டது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அண்ணா சாலை குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வெடிகுண்டு வீச்சு தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தற்போது வரை 8 பேரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 5க்கும் மேற்பட்ட தனிப்படையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்ததாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்பதும், யார் மீது வீசப்பட்டது என்பது குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகின்றது. தற்போது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரபல ரவுடியான சி.டி.மணி, காக்காத்தோப்பு பாலாஜி ஆகியோர் காரில் வந்து கொண்டிருக்கும் போது, அவர்களை நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குவதற்காகவும், ரவுடி சம்பவம் செந்தில் என்பவர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.