திருச்சுழி: திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக குவித்து வைத்திருக்கும் மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இ.சேவை மையம், ஆதார் அட்டை எடுக்கும் மையம், நில அளவைத்துறை ஆகியவை உள்ளன. தினந்தோறும் நூற்றக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குண்டாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வரும் லாரிகளை பிடிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள், மணலை பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். குறிப்பாக வாகனம் நிறுத்தும் பகுதியில் மணலை குவித்து வைத்திருக்கின்றனர். இதனால் ஆதார் அட்டை எடுக்க செல்லும் வழியில் இரு சக்கர வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் ஆதார் எடுக்க செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.