கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் 0.1 சதவீத நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: அரசு புறம்போக்கு மற்றும் கோவில்  நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 0.1 சதவீதம் கோயில் நிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி பதில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: