வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலா முறை: நடைமுறைபடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலா முறையை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், புலி, ஒட்டகம், மான், கரடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விலங்குகளை நாள்தோறும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். சென்னையிலுள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்ப்பது அறிஞர் அண்ணா வண்டலூர் வன உயிரியல் பூங்கா. இங்கு பல்வேறு விலங்குகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் இயற்கை பாதுகாப்போடு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்கா பார்வை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே. வாரந்தோறும் செவ்வாய் கிழமை விடுமுறை.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகைபுரிந்து வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கான கோடைவிடுமுறைகள் வேறு துவங்கி விட்டதால் வண்டலூரில் பார்வையாளர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கும். ஏற்கனவே இங்கு பார்வையாளர்களுக்கென பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேரத்தில் விலங்குகளை கண்டுகளிக்கும் வகையில் இரவு நேர சுற்றுலாவை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: