வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுதள்ளுபடி கைலாஷ் நாட்டின் அதிபரை எப்படி தொடர்பு கொள்வீர்கள்?’: நித்தியானந்தா வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். இவரை பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியில் அளித்த நித்தியானந்தா சில அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து நித்தியானந்தா மீது கோவை 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் என் மீது அவதூறு வழக்கை அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந்த அவதூறு வழக்கிற்காக கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை 2014-ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நித்தியானந்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்தியானந்தா சார்பில் ஆஜராகி வந்த வக்கீல் பாலா டெய்சி, ‘தன்னுடைய வக்காலத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினார். மற்றொரு வக்கீல் நித்தியானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘நித்தியானந்தா ‘கைலாஷ்’ என்று தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும், அவர் அங்கு குடியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை நீதிமன்றமும் தேடி வருகிறது. ஒரு நாட்டின் அதிபரை எப்படி தொடர்பு கொள்வீர்கள்?’ என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை பிப்ரவரி 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: