நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு போலீஸ் காவல்

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், பாரதியார் தெருவை சேர்ந்த முத்துச்செல்வம் (35). கடந்த 17ம் தேதி இரவு முத்துச்செல்வம் பெரும்பாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையில் நேருநகர் சந்திப்பில் பைக்கில் சென்றபோது 3 பேர்  அவரை வழிமறித்து கத்தியால் வெட்டினர். உடனே முத்துச்செல்வம் தப்பி ஓடியபோது அந்த கும்பல் திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது.இதில் படுகாயம் அடைந்த முத்துச்செல்வம் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் கூட்டாளி பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பவரை கைது செய்தனர். மேலும் ராஜேஷ் உள்பட 3  பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ராஜேஷ் (23), கார்த்திக் (20), கண்ணன் (20) ஆகியோர் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசார் மனு செய்தனர்.  இதையடுத்து, ராஜேஷ் உள்பட 3 பேரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: