டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் பேச்சு

புதுச்சேரி: டெல்லி வன்முறையை கண்டித்து புதுச்சேரி மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் ஏராளமானோர் அறவழியில் தொடர் போராட்டம் நடத்தினர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மதவெறியர்கள், அவர்களை கலைக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தோடு சேர்ந்து திட்டமிட்டு இந்த வன்முறையை நடத்தி முடித்துள்ளனர். அமைதியாக போராடிய 40 பேர் கொல்லப்பட்டனர்.

இது திடீரென ஏற்பட்ட வன்முறை அல்ல. இச்சட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ளுங்கள் என பாஜக தலைவர்களே பேசியுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கபில் மிஸ்ரா, அனுராக் மீது ஏன் வழக்குப்பதிந்து கைது செய்யவில்லை?  டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர ராவ் இதுபற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. டெல்லியில் நடந்துள்ள வன்முறை ஒரு ஒத்திகை தான். மதவெறி ஆட்டத்தை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

எனவே, டெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனடியாக பதவி விலக வேண்டும். டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: