சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், நீர்வளப்பிரிவு மூலம் ஏரிகள், அணைகள் புனரமைத்தல் புதிய தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஏரிகள் புனரமைப்பு, தடுப்பணை கட்டுதல், அணைகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் பணிகளை முடிக்காத நிலையிலேயே ஒப்பந்த நிறுவனங்களுக்கு பில் தொகை செட்டில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நீர்வள நிலவள திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் உலக வங்கி குழு சார்பில், பொதுப்பணித்துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொறியாளர்கள் நீர்வள நிலவள திட்டப்பணிகளை ஆய்வு செய்கின்றனரா என்று நீர் ஆய்வு நிறுவன தலைமை பொறியாளர் தட்சணாமூர்த்தியிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.மேலும், ஏரிகள் புனரமைப்பு பணிக்கு தரக்கட்டுப்பாடு பிரிவு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இனி திட்டப்பணிகளுக்கான நிதி விடுவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.