வேலூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியுதவி ₹35 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ₹35 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் பிற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பாதுகாப்புத்திட்ட நிதியுதவி ₹35 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாக உயர்த்தி 2013ல் உத்தரவிடப்பட்டது. இதற்கான சந்தா தொகையும் ₹70ல் இருந்து ₹80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இணையாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான சந்தா தொகையும் ₹80 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கும் குடும்ப பாதுகாப்புத்திட்ட நிதியுதவியை ₹35 ஆயிரத்தில் இருந்து ₹50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.