சென்னை: அதிகவிலைக்கு மதுவிற்பனை செய்யும் ஊழியர்கள் மட்டுமின்றி அவருடன் கடையில் பணியாற்றும் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கை வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலை வைத்து வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, அதிக விலைக்கு மதுவிற்பனை செய்யும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மாவட்டம் தோறும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. மேலும், மதுபாட்டில்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ₹1 கூடுதலாக வைத்து விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ₹1000 அபராதமும், ₹10 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்பவர்களுக்கு பணியிடமாற்றமும், ₹10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.