ஓட்டேரியில் வாகன சோதனையில் அத்துமீறல் ஹெல்மெட் அணியாததால் கட்டையால் தாக்கி இளைஞரின் மண்டை உடைப்பு: தப்ப முயன்ற சிறப்பு எஸ்ஐ. சிறை பிடிப்பு

சென்னை: ஓட்டேரி பகுதியில் புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஓட்டேரி இஎஸ்ஐ குடியிருப்பு பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் சுரேந்தர் (19) என்பவரை மடக்கிப் பிடித்தார். அப்போது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அபராதம் விதிப்பதாகக் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ கூறினார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி எஸ்ஐ ரமேஷ், சுரேந்தரை கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சுரேந்தருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் எஸ்.ஐ.யை தாக்க முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் வள்ளி, சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதுகுறித்து இளைஞர் சுரேந்தர் அளித்த புகாரின்படி, உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: