சென்னை: இன்று திட்டமிட்டபடி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 14ம் தேதி இரவு சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் ஏராளான பெண்களும், ஆண்களும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள், சட்டமன்றத்தை முற்றுகையிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.