எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குறைமாத குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை: இயக்குனர் தகவல்

சென்னை: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் போதியளவில் உள்ளதாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா கூறினார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஷர்வாணி (24). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமான 7 மாதத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது கர்ப்பப்பையின் பனிக்குடத்தில் போதியளவில் நீர் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் அவருக்கு  1.1 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மற்ற உறுப்புகள் போதியளவில் வளர்ச்சியடையாமல் இருந்தன. ஒருமாத தீவிர சிகிச்சைக்கு பின், குழந்தை இயல்பு நிலையில் சுவாசிக்க தொடங்கியது. மேலும், உடல் எடையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது: இந்த குழந்தை பிறந்தபோது எடை குறைந்து காணப்பட்டது. ஒரு மாதம் குழந்தை தீவிர கண்காணிப்பில் இருந்தது. தற்போது குழந்தையின் எடை 1.4 கிலோ அதிகரித்துள்ளது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியதால் தாயும், குழந்தையும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குறை பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் போதியளவில் உள்ளன. இவ்வாறு கூறினார்.

Related Stories: